Saturday 11 November 2017

சொல்லத் தோன்றுகிறது!

அப்போது இரவு  எட்டு  மணி. இதமான குளிர் காற்று முகத்தில் பரவி புத்துணர்ச்சியைத் தந்தது  .   என்னுடைய நண்பர் சதாசிவனி என்னை பார்க்க வந்திருந்தார். அதனால் வீட்டிற்கு வெளியே நின்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் எங்களைக் கடந்து சென்றார்.

சதாசிவனி, அந்தப் பெண்ணை பாருங்கள் என்றார். பார்த்தேன். அவளுக்கு வயது முப்பது இருக்கும் ; பெண்கள் அணியும் ஜீன்ஸ் கால்சாராய் அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தார்.  ஆனால் , அந்த முகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சோகம் படிந்துள்ளதாக எனக்குத் தோன்றியது. ஓரிரு நிமிடத்தில் அவள் எங்களைக் கடந்தும் சென்று விட்டாள். 

சதாசிவனி, அந்தப்பெண்ணை ஒரு விலைமாது என்று குறிப்பிட்டார்.  என்னால் நம்ப  முடியவில்லை. உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற வேள்வியை எழுப்பினேன் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் இருவரின் வீடும் அருகருகில் தான் இருந்தது. இந்தப்பெண்ணின் நடவடிக்கை பிடிக்காமலே நான் வேறு வீட்டிற்கு சென்று விட்டேன் என்றார்.

என் நண்பர் சதாசிவனி மிகவும் ஒழுக்கசீலர். நேர்மையானவர். அளவுகடந்த கடமையுணர்வு உள்ளவர்.  தனது எண்பத்தி ஐந்து வயதான தாயை மிகவும் கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாத்து வருபவர். தனது தாயை  வீட்டை வெளியேற்றி விட வேண்டும் என்று கூறிய  மனைவியையே விவாகரத்து செய்து விட்டவர். அதனால் அவர் வார்த்தையை சந்தேகப்பட முடியாது. மனம் வலித்தது .

அடுத்து அவர் கூறியது   தான் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது . அந்தப் பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர் . கணவர் ஒரு வியாபாரி. அவரின்  வியாபாரம் நொடித்துப் போனதால் , தனது குழந்தைகளை வளர்ப்பத்ற்காகவும் இன்னபிற தேவைகளுக்காகவும் இந்த பெண் இவ்வாறான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் அவரது கணவரும் இதை அனுமதித்து இருக்கிறார் , அவரது விருப்பத்தின் பேரிலே அவள் விலை பொருளாகி இருக்கிறார் என்பது தான்..  

தனது காதல் கனவுகள் சிதைந்து நரக வாழ்க்கையில் தள்ளப்பட்ட அந்தப் பெண்ணிடம் எப்படி சந்தோசம் இருக்கும். அவள்  முகத்தில் படர்ந்திருந்த சோகத்தின் கதை இப்போது எனக்கு சரியாக புரிந்தது. எனக்கு தெரிந்த வரை இல்லற வாழ்வு தோல்வி அடைந்த எல்லாக் குடும்பங்களிலும் பெண்களே தண்டனை அனுபவிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இது ஒரு சமூக நோய். இத்தகைய பரிதாப நிலை  களைந்து எரிய படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் எப்படி?. அந்தப்பெண்ணின் சீரழிந்த வாழ்வு அவளை மட்டுமல்லாமல் , அவளுடன் தொடர்பில் இருக்கும் அனைவரையும் பாதிக்குமல்லவா? இதற்கான தீர்வு தான் என்ன?. எனக்குத் தெரியவில்லை.  


நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை நடைபயிற்சியின் போது   அந்தப்பெண்ணைப்  பார்த்தேன். அவரது  மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய வாகனத்திற்காக காத்திருந்தார். தமது இரு கரங்களுக்கும் இடையே அமர்ந்திருந்த மகனின் தலையில்கண்களில்  பாசம் மிளிர  கொள்ளை  அழகுடன் முத்தமிடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு தாய் தான் என் கண்களுக்கு தெரிந்தாள்; விலைமாதல்ல!





Saturday 12 August 2017

நானும் ஹோமியோபதியும்

நானும்  ஹோமியோபதியும் 

I

இன்று மருத்துவ உலகம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மக்களை பல்வேறு உயிர்கொல்லி  நோயிலிருந்து பாதுகாக்க  அலோபதி மருத்துவம், ஹோமியோபதி , சித்தா, ஆயுர்வேதம் ,யுனானி , அக்குப்பஞ்சர் மற்றும் அக்குப்பிரசர் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் அதனதன் போக்கில் செயல்படுகிறது. இருந்தாலும் மனிதர்களுக்கு மரணம் என்பது சாசுவதமானது!. உலகில் உருவான எல்லா உயிரினங்களும் ஒரு நாள் அழியக் கூடியதே!. ஆனாலும் மக்கள் மரணத்தைக் வென்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும்,  ஒவ்வொரு மனிதனும் அவனது மனதையும் , உடலையும்  பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வது என்பது இன்றைய சூழ்நிலையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அவ்வாறு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனம் மற்றும் உடல் சார்ந்த மருத்துவ அறிவும் , விழிப்புணர்வும் அவசியம் தேவை என்று கருதுகிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி என்ற சிறிய நகரத்தில்  மத்திய அரசு அலுவலகத்தில் நான் பணியில் இருந்தேன். கனிந்த இதயம் படைத்தவர்களையும், கடும் உழைப்பாளிகளையும் , கரடு முரடான மனிதர்களையும் தன்னகத்தே கொண்ட ஊர் அதுபிரம்மச்சரிய  வாழ்க்கை என்பதால் ஹோட்டல் சாப்பாடு தான் . அதனால் வயிறு பாடாய் படுத்தியது. நல்ல உடற்பயிற்சி செய்த உடம்பு என்பதால்  மருத்துவமனைக்கு சென்ற அனுபவமெல்லாம் அதுவரை இல்லை. இருந்தாலும் தொடர்ச்சியான அசைவ உணவும் , இரவுப்பணியின் காரணமாக தூக்கமின்மையும் எனது வயிற்றைக் கெடுத்துவிட்டது. ஒரு நண்பரின் பரிந்துரையின்படி உசிலம்பட்டி பேரூந்து நிலையத்தின் அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனைக்கு பெயர் பலகை இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. பத்தடி நீளமும் , ஆறடி அகலமும் கொண்ட குறுகலான இடம் அது. அதன் நடுவில் இருந்த மேஜை முன்பு வெள்ளைச் சட்டை அணிந்திருந்த அந்த மருத்துவர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். தலை முழுவதுமாக நரைத்து இருந்தது . அவரைப் பார்த்ததும் , எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது . அதற்குக் காரணம் , அவருக்குப் பின்னால் இருந்த அந்த  பெரிய புத்தக அலமாரிகள். அவருக்கு பின்புறம் இரண்டு , வலது பக்கம் ஒன்று என்று மொத்தம் மூன்று புத்தக அலமாரிகள்மற்றும் இடது பக்கம் கருப்பு நிறத்தில் மருந்து பாட்டில்களை உள்ளடக்கிய ஒரு உயரமான அலமாரி. அதனால் அவர் உண்மையிலேயே  ஒரு சிறந்த அறிவாளியாகத்தான் இருக்க  வேண்டும் என்று எனது  மனம் நம்பியது. பிற்காலத்தில் எனக்கு பின்னாலும் அத்தகைய புத்தக அலமாரிகள் இருக்கப் போகிறது என்று அப்போது தெரியாது . ஆம்! அது ஒரு ஹோமியோபதி மருத்துவமனை . அந்த மருத்துவரின்  பெயர் எனக்கு நன்றாக  ஞாபகம் இருக்கிறது!.  ஆம், அவர் சாந்தகுமார்!. அவரது சிகிச்சையில் அப்போது என்னுடைய வயிற்று தொந்தரவு சரியாகவில்லை என்றாலும் ஹோமியோபதி என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது என்பது ஆச்சரியமான ஒன்று!


அதன் பிறகு , 1983 ஆம் ஆண்டில்  ஒரு நாள் எனது குடும்பத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவம் ஏற்பட்டு விட்டது எனது இரண்டாவது தம்பியை   வலிப்பு நோய் தாக்கியது . அப்போது , அவன் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான் . மிகவும் புத்திசாலி. வகுப்பில் அவனே முதல் மாணவன், அவனுக்கு , மதுரையில் இருந்த சிறந்த மனநல மருத்துவர் சபேசனிடம் தான் சிகிச்சை எடுத்தோம் . அவர் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டும் என்று சில மருந்துகளை பரிந்துரை செய்தார். அது எப்டாயின் மற்றும்  டெக்கிரிடால் என்ற மருந்துகள் தான். இன்றும் இந்த மருந்துகளே வலிப்பு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிகிறதுசில சமயங்களில் வலிப்பு நோயின் அதிதீவிரத் தாக்குதலால் மூளைக்குழப்பம் ஏற்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டியதும்  வந்தது. அந்த மாதிரி சமயங்களில் பத்து நாட்களுக்கு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவனை  கார்டினால் ஊசி மருந்து கொடுத்து தான் தூங்க வைக்க முடியும்இப்படி வருடத்திற்கு இரண்டு தடவையாவது நிகழ்ந்து விடும். எனது சிறிய வருமானத்தில் என் தம்பியின் மருத்துவச் செலவும் குடும்ப நிர்வாகமும்  மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் எனது சகோதர பாசத்திற்கு முன்பு அதெல்லாம் எனக்கு சிரமமாகத் தோன்றவில்லைஆனால் , அப்போது அவனுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில்  சிகிச்சை கொடுக்கலாம் என்று ஏன் எனக்கு தோன்றவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது!. இருந்தாலும் இந்த மாதிரியான மன நோய்களில் ஆங்கில மருத்துவத்தில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வசதி இல்லாமல் பல குடும்பங்கள் இன்றும்  தற்கொலை செய்துகொள்வதை நாம் பத்திரிக்கைகளில் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம்.


அதன் பிறகு 1991 ஆண்டு என்று கருதுகிறேன். எனது தாய்மாமனின் 12 வயது  மகனுக்கு வயிற்றுவலி இருந்தது. அவனை மதுரையிலுள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது வலது பக்க சிறுநீரகத்தில் கட்டி உருவாகி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்திருந்தது. அதனால் அதை நீக்கிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். இடதுபக்க சிறுநீரகம் நன்றாக செயல் படுவதாகவும் , அதனால் உயிர் வாழ்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தார்கள். 

ஆனால் நடந்தது என்னவோ மிகவும் துரதிருஷ்டமான முடிவு. அறுவை சிகிச்சை செய்து வலது பக்க சிறுநீரகத்தை நீக்கிய பிறகு , இடது பக்கச் சிறுநீரகம் அந்த அதிர்ச்சியில் செயல் படாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் . எவ்வளவோ மருத்துவம் செய்தும் அந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்க முடியவில்லை.  மாற்று சிறுநீரகம் பொருத்துவது தான் சரியானது என்பது தெரிந்து விட்டது. ஆனால் அதற்கு அதிகப்பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகி இருந்தது. மேலும் பல லட்சங்களை செலவு செய்யக் கூடிய வசதியும் ஏழை விவசாயியான என் மாமனிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் , மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்த பிறகு அந்த சிறுநீரகமும் சரியாக செயல்படத் துவங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. எங்கள் குடும்பமே பெரும் துயரத்தில் ஆழ்ந்தது.

மனம் முழுவதும் வேதனையைச் சுமந்து கொண்டு , மருத்துவமனையிலிருந்து அவனையும் சுமந்துகொண்டு வீடு திரும்பினோம். அவன் இறக்கப் போகிறான் என்று தெரிந்தும் மருத்துவத்தைத் தொடர முடியாமல்  அவனை வீட்டிற்கு அழைத்து வந்ததை   என்னால் தாங்க முடியவில்லை . என் கரங்களில் தவழ்ந்த அந்த அழகான குழந்தை , எங்களால் காப்பாற்ற இயலாமல்  கைவிடப்பட்டு மரணித்தது. என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட அந்த வலி இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த  பிறகும்  இப்போதும் இருந்து கொண்டே உள்ளது  . அந்த வலி தான் ஹோமியோபதியை  நான்   ஆழமாக  கற்றுக்  கொள்வதற்கும்  , உயிராக   நேசிப்பதற்கும்  உந்து   சக்தியாக   இருக்கிறது .




II


ஹோமியோபதி மருத்துவ அறிவியலறிவு  எனக்கு கிடைப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் எனதருமை நண்பர் வி. பாலு தான். இத்தகைய நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவருக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். அது ஒரு சுவையான கதை.


1992 ஆம் ஆண்டு , நான்  உசிலம்பட்டியிலிருந்து மாற்றலாகி மதுரையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  என்னுடைய உற்சாகமான தொழிற்சங்கப் பணியினாலும் ,அனைவரிடமும் நன்றாக பழகும் தன்மையினாலும் கவரப்பட்ட  நண்பர் வி.பாலு ஒரு நாள் நீங்கள் எங்களது ஹோமியோபதி மருத்துவச்  சங்கத்தில் சேர்ந்தால் ஹோமியோபதி மருத்துவத்தை கற்பதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் சமூகத்திற்கும் தொண்டாற்ற முடியும் என்று ஊக்கப்படுத்தினார். ஏற்கனவே, எனது மைத்துனனின் மரணம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்னை யோசிக்க வைத்தது. அவரது ஆலோசனையை ஏற்றுக் ஏற்றுக் கொண்டு ,"தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கத்தில் இணைந்தேன். இப்படித்தான் “AProCH”  எனக்கு அறிமுகமானது.

ஆனால் இந்தச் சங்கத்தில் சேருவதற்கு  மற்ற சங்கங்களை போன்று சந்தா கொடுத்து  மட்டும் சேர்ந்து விட முடியாது.   அதற்கென்று உள்ள நிர்வாகக் குழுவினரால் , உறுப்பினராக சேர இருப்பவரை பேட்டிக்கண்டு , அவருக்கு சமூக சேவை செய்யும் மனப்பான்மையை இருக்கிறதா ? , பரந்துபட்ட வாசிப்பனுபவம் இருக்கிறதா? , இவரால் சங்கத்திற்கும் சமூகத்திற்கும் பயன் இருக்குமா ? என்றெல்லாம் சோதித்து பார்த்துத்தான் சேர்த்து கொள்வார்கள். ஒவ்வொரு  ஞாயிறு தோறும் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் சேவை மையத்தை நாடி வரும் அனைவருக்கும்  இலவசமாக மருத்துவ சேவை செய்வதும் , அதன் உறுப்பினர்களுக்கு ஹோமியோபதி விழிப்புணர்வுக் கல்வியைப் போதிப்பதும் அதனுடைய தலையாயப் பணியாகும்.

அதனால் தான் 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்  சங்கம் கடந்த 26 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும்  தனது கிளைகளை உருவாக்கி மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் வித்திட்டு வருகிறது. இப்படித்தான் தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கம் என்னையும் உள்வாங்கிக் கொண்டது.

கடந்த 23 ஆண்டுகளாக  நான்  தினமும் சுவாசிக்கும் மூச்சுக் காற்றோடு  , ஹோமியோபதியையும் சேர்த்தே சுவாசிக்கிறேன்.  எனது குடும்பம், நண்பர்கள் , பெரும்பாலான உறவினர்கள் அனைவரும் ஹோமியோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம்  மக்களிடம் ஹோமியோபதியின் சிறப்புகளை எடுத்தியம்பி , தேவைப்பட்டால் அவர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியும் வருகிறேன். அலோபதி மருத்துவத்தின் தீமைகளையும் , நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அவலத்தையும் , பணம் சம்பாதிப்பதே  ஒன்றே அவர்களின் குறிக்கோள் என்பதையும் எடுத்துக்கூறி அவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறேன்.





குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத பல பெண்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் அந்தத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்து  அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைத்திருக்கிறேன்.  சோரியாசிஸ் , புற்றுநோய்  மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற நோய்தாக்குதலுக்கு உள்ளான  எத்தனையோ துயரர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியிருக்கிறேன். எனது சிகிச்சையின் மூலம் நலம்பெற்ற பலரின் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு திருப்தியைக் கொடுத்திருக்கிறது அவர்கள் நெகிழ்ச்சியோடு கரம் கூப்பி நன்றி தெரிவிக்கும் போதெல்லாம் எனது வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


ஹோமியோபதி அறிவு என்னுள் சுடர்விட்ட பிறகு தான் எனது தனியியல்பு பண்பு, ஆளுமை, மற்றும் புரிதல் ஆகியவைகள் செழுமையடைந்திருக்கிறது. என்னுள் இருந்த தன்முனைப்பு , அகந்தை மற்றும் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு தூர விலகின. குறிப்பாக ,   என்னுள் முகிழ்த்த ஹோமியோபதி அறிவே என் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளில் என்னை வெற்றி பெற செய்து ,  எனது பதவி உயர்விற்கும் வித்திட்டது ; அதன் மூலம் எனது பொருளாதார நிலை உயர்ந்து சமூக அந்தஸ்து கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமல்லமல் இந்தியா முழுவதும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

இத்தனைக்கும் காரணம் ஜெர்மானிய மாமேதை சாமுவேல் ஹானிமன் [1755-1843] கண்டெடுத்து உலகிற்கு நல்கிய ஹோமியோபதி மருத்துவம் தான். அவர் இறந்த பிறகு பாரிஸ் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்ட  அவரது   கல்லறையில் " நான் வீணான வாழ்க்கை வாழவில்லை" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த வரிகள், அவர் எவ்வளவு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதற்கான அடையாளச்சின்னமாக இருக்கிறது.





Monday 19 June 2017

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்-2



இரா .சண்முகவேல்
ஜீவா படிப்பகம்- கீழக்கலங்கல்


தூய ஹோமியோபதி பிரச்சாரச்சங்கம்  , சங்கரன்கோவில் கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவரான மரு.முருகையா , தனது " வாதநோயும் ஹோமியோபதியும்"  என்ற நூலை 14/06/2017 ந் தேதியன்று  வெளியிடுமாறு அன்புடன் என்னை அழைத்திருந்தார். அந்த நூலைப் பெற்றுக்கொள்பவர் தான் இந்தத் தோழர் இரா.சண்முகவேல்.

மரு.முருகையா அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் புறநகர்ப்பகுதியான கிருஷ்னாபுரத்தில் தான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிறிய இல்லத்தில் பலன் தரும் பல  நல்ல மரங்களை நட்டு இயற்கையழகுடன் மரு.முருகையா வாழ்ந்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அத்தகைய வீடு ஒன்று கட்டவேண்டும்  என்பது எனது மனதிற்குள் இன்றும் கனவாக இருக்கிறது.


தூய ஹோமியோபதி பிரச்சாரச்சங்கத்தின் பிரதிநிதிகள், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மற்றும் மலர்மருத்துவம் சார்ந்த மருத்துவர்களும் , அவரது ஆசிரியர் திரு . தர்மராஜ் உள்ளிட்ட மற்றும் பல நண்பர்களும் கலந்து கொண்டார்கள். முதல் நிகழ்வாக புத்தகத்தை வெளியிட்டவுடன்  நான் உரையாற்ற வேண்டும். புத்தகத்தின் முதல் பிரதியை தோழர்.இரா .சண்முகவேல் அவர்களிடம் கொடுத்தபோது தான் அவரை  முதன் முதலாக கவனித்தேன். மிகவும் எளிமையாக இருந்தார். சிவப்புச்சட்டை, இடுப்பில் பழுப்புநிறத்தில் வெள்ளை வேட்டி. அவரது உழைப்பின் வியர்வை அதில் படிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. காலில் செருப்பு இல்லை. இது உண்மையான இடதுசாரித் தோழருக்குரிய அடையாளம் என்பதை புரிந்து கொண்டேன்.

எனது உரையை முடித்துவிட்டுமரு. முருகையா அவர்களுக்கு " பெரியார்- அன்றும்  என்றும் " என்ற விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூலை கொடுத்துவிட்டு அமர்ந்தேன். அடுத்து அனைவரும் முருகையாவின் மருத்துவப்பணியையும் எழுத்துப்பணியையையும் பாராட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் தோழர்.சண்முகவேல் நிகழ்ச்சியில் பேசுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவரிடம் கேட்டபொழுது மேடைகளிலோ இத்தகைய நிகழ்ச்சிகளிலோ பேசி பழக்கமில்லை என்று அமைதியாக மறுத்துவிட்டார்.  ஆனால் நீங்கள் முருகையாவிற்கு பரிசளித்த புத்தகம் மிகவும் அருமையானது; பொருத்தமானதும் கூட என்று தமது மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அடுத்து ஐயா , நீங்கள் இடது சரியா ? அல்லது தி.க வா? என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். ஐயா, நான் இடதுசாரிக் கொள்கைகளை கருத்திலும் , தந்தைப் பெரியாரை தோளிலும் சுமப்பவன் என்றேன். அவர் இதை மிகவும் ரசித்ததோடு மகிழ்ச்சியுமடைந்தார்.  அத்துடன் இவ்வளவு பெரிய புத்தகத்தை நீங்கள்  மதுரையிலிருந்து சுமந்து வந்திருக்கும் போதே உங்களை பற்றி ஓரளவு புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.


பின்பு அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது , அவர் கீழக்கலங்களில் (சங்கரன்கோவில்) "ஜீவா படிப்பகம் " நடத்தி வருவதும் , லெட்சுமி வடிவு புத்தக நிலையம் வைத்திருப்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர்,  அப்பழுக்கற்ற இடதுசாரி சிந்தனையாளர் ஜீவா அவர்களின் தீவிரத் தொண்டர்  என்பதையும், அவரது பிறந்தநாளை  ஆண்டுதோறும்  சங்கரன்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடுவதையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவில் குழந்தைகளுக்கு புத்தகங்களையும் , நகரில் சாதனை புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவதும் அவருக்கு பிடித்தமானது என்று மரு.முருகையா தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல், இந்தப் " பெரியார்- அன்றும்  என்றும் " என்ற புத்தகத்தின் நூறு பிரதிகளை  அவர் சங்கரன்கோவில் பகுதியில் விற்று இருப்பதும் தெரிய வந்தது. அதனால் அவரின் மேல் எனக்கு இருந்த மரியாதை மிகவும் அதிகரித்தது . அவரை பற்றி மேலும்  தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, ஐயா , தயவு செய்து நீங்கள் இரண்டு நிமிடங்களாவது மருத்துவம் பற்றியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான செய்திகள் பற்றியோ பேசவேண்டும் என்று உற்சாகப்படுத்தினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 

அவர் தமது உரையை ஒரு பாடலிலிருந்து துவங்குகிறேன் என்று ஆரம்பித்தார். அப்பாடல் இதோ;

சொர்க்கம் ஒரு சுகமா ! சுமையா !
சுற்றம் ஒரு நிழலா! நெருப்பா!
உறவு நம் சிறகா! பகையா!
உற்றார் இங்கு வரவா! பயமா!

உறவைப்பிரிஞ்சு காட்டு யானை
மதம் பிடித்து அலையுது
உறவிலே தான் மனித வாழ்க்கை
கருப்பட்டியாய் இனிக்காது.

ஆயி மகமாயி
ஒரு நியாயம் சொல்லவாடி
தாயி பிள்ளை சேலை உறவு
ஒரு நேரம் வருமாடி

                          (சொர்க்கம்….)

குருவிக்கும் உறவு
இங்கு துறவிக்கும் உறவு
குடும்பம் என்பதே
வாழ்க்கை அழகு
பகைவன் இடத்திலும்
பண்பு கொண்டாடும்
பண்பு மிகுந்தாலே
வாழ்க்கை அழகு

அடுக்குப்பானை போல உறவு
ஒண்ணை ஒண்ணை தாங்கணும்
எடுத்தெறிந்து பேசினாலும்
உறவு இங்கு மாறிடும்
                       (ஆயி.. மகமாயி)

காய்ந்திடும் நிலவு
இங்கு சாய்ந்திடும் பொழுது
இரவும் பகலுமே இயற்கை உறவு

ஐந்து விரல்களும்
ஐந்து விதங்கள் தான்
உரிமை கொள்ளுமே உழைத்திடும் பொழுது
உடைந்து போன தங்கத்தை
சூடு வைத்து ஓட்டலாம்
கிழிந்து போன சேலை கூட
அன்பை வைத்துக் கட்டலாம்


ஆயி மகமாயி
ஒரு நியாயம் சொல்லவாடி
தாயி பிள்ளை சேலை உறவு
ஒரு நேரம் வருமாடி

சொர்க்கம் ஒரு சுகமா ! சுமையா !
சுற்றம் ஒரு நிழலா! நெருப்பா!
உறவு நம் சிறகா! பகையா!
உற்றார் இங்கு வரவா! பயமா

               -கவிஞர் பரிநாமன்*

(*கவிஞர் பரிநாமனின் இப்பாடலில் தவறு இருந்தால் மன்னிக்கவும். சரியான வரிகளைத் தெரிவிக்கவும் )

அழகான இந்த பாடல் , பற்களற்ற அந்த 76 வயது இளைஞனின் வாயிலிருந்து இனிமையான ராகத்தோடு வெளிவந்த பொழுது , அரங்கு அமைதியுடன் உள்வாங்கிக் கொண்டது. சிறிதும் குழப்பமின்றி, நினைவு தடுமாற்றமின்றி  மிக அழகாகப் பாடினார் தோழர்.சண்முகவேல். இடதுசாரி கவிஞன் பரிநாமனின் இப்பாடலைப் பற்றிய விபரங்கள் எனக்கு தெரிந்திருக்கவில்லை. .  அதனால் நான் கேட்டு கொண்டதற்கிணங்க சதா அவரது மனதில் தாளமிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாடலை  நினைவுகளிலிருந்து எழுதிக் கொடுத்தார். அவரது நினைவாற்றல் எனக்கு வியப்பைத் தந்தது.

அவரது உரையின் போது தான் ஒரு சாதாரணமான மனிதன் என்றும் அதிகம் படித்தவனில்லை , மருத்துவமும்  தெரியாது, ஏன்! கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவமனைக்கும்  சென்றதில்லை. என்னை இந்த புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நண்பர் முருகையா கேட்ட பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். இங்கு வந்த பிறகு தான் அவரைப் பற்றி அதிகமாகவும், ஹோமியோபதியின் மகத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தோழர்.சண்முகவேல். அத்தோடு தான் இந்த 76 வயதிலும் தினமும் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை பக்கம் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் நகைசுவையாக குறிப்பிட்டார்.


அவரது போலித்தன்மையற்ற எளிமையான வாழ்வு என்னை மிகவும் கவர்ந்தது. நான் சந்தித்த அரிய இடதுசாரித் தோழர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.  அவரிடம் மேலும் பேசிக்கொண்டிருந்த பொழுது மக்கள் நன்மைக்காக இந்த இரண்டு இடது சாரி இயக்கங்களும் ஒன்று சேரவேண்டும்  என்பதையும்,  அதற்கு இதுவே சரியான தருணம்  என்ற தமது கணிப்பையும் வெளிப்படுத்தினார். ஆனால்  மார்க்ஸ் , ஏங்கல்ஸ் மற்றும் லெனின் கற்பித்த அல்லது கடைபிடித்த கம்யூனிசப் பாதையிலிருந்து விலகி,  சமரசத்துடன் செயல்படும் ஓட்டெடுப்பு அரசியலுக்குள் வெகுதூரம் பயணித்துவிட்ட அந்த இயக்கங்கள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள்  சமீபத்தில் இல்லை என்பதை தோழர்.இரா.சண்முகவேல் அவர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆண்டுகள் பல ஆகலாம். அதுவரை, அவர் நம்பிக்கையுடன் அவரது பாதையில் பயணிக்கட்டும்.


புத்தக வெளியீட்டு விழா முடிந்து நான் வீடு திரும்பும் போது ஒரு அப்பழுக்கற்ற இடதுசாரி தோழனை பார்த்துவிட்ட திருப்தி எனக்கு இருந்தது. இவர்களை போன்றவர்களே சமூகத்திற்கு உரமாக இருக்கிறார்கள். இந்தியாவில் , கோவில்கள் இருக்கும் வரை எப்படி இந்துக்கள் இருப்பார்களோ அது போல் தோழர்.சண்முகவேல் போன்றவர்கள் இருக்கும் வரை இடதுசாரி இயக்கங்களும் இருக்கும்.

சு.கருப்பையா

Mob: +919486102431