Monday 11 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-11

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

குறள் 423 :  அதிகாரம்- அறிவுடைமை.


எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.( மு.வ உரை)


எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.( சாலமன் பாப்பையா உரை)


எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். (கலைஞர் உரை).



 மரு. .கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் பொழுது ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவருக்கும் அன்று நினைவுக்கு வருவது   மருத்துவர் ஹெர்ரிங்  தான்.  ஆம் !  18 ஆம் நூற்றாண்டில் ,  மருத்துவர் சாமுவேல் ஹானிமன் ஹோமியோபதி மருத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்த பிறகு , அதை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் எடுத்து சென்றவர் இவரே. இவரும் ஒரு ஜெர்மானியரே. ஆனால் , அமெரிக்காவில்  ஹோமியோபதியை முழுவீச்சில் செயல் படுத்தியதால்        "அமெரிக்க ஹோமியோ மருத்துவத்தின் தந்தை  " என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.    இவருக்கும் , இந்த குறளுக்கும் மிகவும் சம்மந்தமுள்ளது. அக்கதையை இப்போது பார்க்கலாம். 


ஹெர்ரிங் தமது 17 வது வயதில்  "  சர்சிகல் அகாடமி அப் டிரிஸ்டன்”  இல் சேர்ந்து படிப்பு முடிந்தவுடன்  , மருத்துவம் பயிலுவதற்காக   கி.பி 1820 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.  அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பிரபல மருத்துவ சிகிச்சை நிபுணர் மரு. ஹென்ரிச் ராபி.  இவர் மாமேதை ஹானிமனுக்கும்  அவரின் கண்டுபிடிப்பான ஹோமியோபதிக்கும் கடுமையான எதிரியாகத் திகழ்ந்தவர்.


கி.பி 1821 இல்  மாமேதை ஹானிமன் ஹோமியோபதியை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது அதற்கு இணையாக கடுமையான எதிர்ப்பும் வலுத்திருந்தது . லீப்சிக் நகரின் பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாம் கார்ட்னர்   ( C.BAUMGARTNER)  ஹோமியோபதியை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில்,  அது ஒரு தவறான மருத்துவமுறை ; மக்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தை வெளிக்கொணருமாறு ஒரு புத்தகம் எழுதுமாறு  மரு.ராபியை அணுகினார்ஆனால் அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்பணியை அவரின் சிறந்த மாணவரான ஹெர்ரிங் வசம் ஒப்படைத்தார்.  


மருத்துவர் ஹெர்ரிங் மிகவும் நேர்மையான குணத்திற்குக் சொந்தக்காரர் . தமது கடமையில் சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர்.  எக்கருத்தையும்  ஆழமாக புரிந்துகொண்ட பிறகே , அது சரியென்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் குணம் படைத்தவர்.  மருத்துவர் ராபியின் கோரிக்கையை  ஏற்றுக் கொண்ட ஹெர்ரிங் ,  ஹோமியோபதி பற்றி விமர்சிக்கும் முன்பு அதை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் ,  ஹோமியோபதி மருத்துவம் பற்றியும் , அதன் தத்துவார்த்த பின்னணி பற்றியும் கற்க ஆரம்பித்தார்.


மாமேதை ஹானிமனின் கட்டுரைகளையும் , மருந்து நிருபணங்களையும் சேகரித்து நுணுக்கமாக ஆராய்ந்தார்.    ஹோமியோபதி மருத்துவம் உருவாக காரமாக இருந்த சின்கோனா மருந்தை ( CHINA) உட்கொண்டு மறுபடியும் நிருபணம் செய்து ஹானிமனின் பரிசோதனை சரிதான் என்று உறுதியும் செய்தார்.  ஹோமியோபதியின் மேல் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஹோமியோபதிக்கு எதிராக எழுதுவதற்கு எந்தக் கருத்தும் இல்லாமல் போய்விட்டது.
 

இத்தருணத்தில் ஹெர்ரிங் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது . அதாவது கி.பி. 1824 இல்  ஹெர்ரிங் ஒரு சவத்தை அறுத்து பரிசோதனை செய்த பொழுது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுபின்னர் சீழ்பிடித்து கடுமையான புண்ணாக மாறிவிட்டது.  அவரது காயத்தைப் போக்கும் ஆற்றல் எந்த பாரம்பரிய மருந்திற்கும்  இல்லாமல் போய்விட்டது. அவரது கட்டைவிரலை எடுக்க வேண்டிய நிலை.
 

அச்சமயத்தில் ஹானிமனின் மாணவர்களில் ஒருவரான மரு .கும்மர்  ( KUMMER)  ஹெரிங்கை பரிசோதித்து சரியான ஹோமியோபதி மருந்தான  “ ஆர்சனிகம் ஆல்பம்" என்ற மருந்தைக்  கொடுத்தார்.  சில வேளை மருந்து உட்கொண்ட பின்னர் காயம் முழுமையாக நலமாகி குணமடைந்தார்.  அவரது கட்டைவிரல் காப்பாற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சி ஹெர்ரிங் அவர்களுக்கு  மிகப் பெரிய ஆச்சரியத்தையும்ஹோமியோபதியின் மீது நம்பிக்கையையும்  ஏற்படுத்தியது .  உடனடியாக தான் ஹோமியோபதிக்கு மாறிவிட்டதாக அறிவித்தார்.  கி.பி.1826 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் மருத்துவப் பட்டம் பெறும்போது அவர் சமர்பித்த " எதிர்காலத்திற்கான மருந்துகள் " ( On the medicine of the future) என்ற ஆய்வுக் கட்டுரை ஹெர்ரிங்  ஹோமியோபதிக்கு முழுமையாக மாறிவிட்டதை உறுதி செய்தது.  


கி.பி. 1833 இல் அமெரிக்கா சென்று அங்கே பிலடெல்பியாவில் தங்கினார். கி.பி.1848 இல் " ஹானிமன் மருத்துவக் கல்லூரி"யை தொடங்கி தமது மருத்துவ சேவையினை தொடர்ந்தார். இக்கல்லூரியே உலகம் முழுவதுமுள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மிகச் சிறந்தது என்று இன்று வரை கருதப்படுகின்றது. ஹெர்ரிங் மற்றும் அவரது மாணவர்களும் சேர்ந்து ஆண்டிற்கு 50000 துயரர்களை நலமடைய செய்ததோடு மட்டுமல்லாமல்  3500 ஹோமியோபதியர்களையும் உருக்காகினார்கள். 


மரு. ஹெர்ரிங் தமது அனுபவங்களையும் ,மருந்துகளையும் " வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் (Guiding Symptomsபதிவு செய்ய ஆரம்பித்தார். அவை, " மருந்துகாண் ஏட்டின் வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் கி.பி. 1879 இல்    வெளிவந்தன. மற்ற எட்டு தொகுதிகளும் அவரது மாணவர்களால் எழுதப்பட்டு அவரது மறைவிற்குப் பிறகே கி.பி.1891 இல்   வெளியிடப்பட்டன.  


கி.பி. 1880 இல் அதாவது  23/06//1880 ந் தேதி  தான் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு வரை கொட்டும் பனியில்  ஒரு இதய நோயாளியை பார்த்துவிட்டு வந்து  இரவு பத்து மணிக்கு மேல் இறந்தார் . அதனால் இந்தக் குறளை வாசிக்கும் போதெல்லாம் நம் நினைவிற்கு வருபவர்களில்  மருத்துவர் ஹெரிங்  அவர்களும் ஒருவர் என்பதில் ஆச்சரியமில்லை தானே!.


Sunday 10 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-10

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

 அதிகாரம்:  ஊக்கமுடைமை  

குறள்: 597

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
மு.வ உரை:

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
கலைஞர் உரை:



இக்குறளை வாசித்த பொழுது எனக்கு இந்தியாவின் மாபெரும் புரட்சியாளன் பகத்சிங் தான் என் ஞாபகத்திற்கு வந்தான். அன்று 23-03-1931 ந் தேதி தூக்குக்கயிறை முத்தமிட செல்லும் தருணத்திலும் ,எந்த சலனமும் இல்லாமல் " அரசும் புரட்சியும் " என்ற லெனின் நூலை வாசித்த அந்த நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. நான் சோர்ந்து போகும் நேரத்திலெல்லாம் அவன் தான் எனக்கு வலு கொடுத்துள்ளான். அவனது வாழ்க்கை நம்  தேசத்தின் எழுச்சி; என்றென்றும் அழிக்கமுடியாத வரலாறு. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவனை அறிந்திருக்க வேண்டும். இந்தியத் தாயின்  அடிமை விலங்கை வெட்டியெறிய அவனும் , அவனது தோழர்களும் ஆற்றிய பங்களிப்பும் , உயிர் தியாகமும் இந்திய அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது.





பகத் சிங் ,  1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அல்லது 28 ந் தேதி  பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.  இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட  சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.   இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால்  குறிப்பிடப்படுவதுண்டு.

1919இல், தனக்கு பன்னிரெண்டு வயதான போது, பகத்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நினைத்து மனம் வெதும்பிய பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார். மாபெரும் புரட்சியாளனும் , சிறந்த வீரனுமான சந்திரசேகர ஆசாத்தை தனது குருவாக ஏற்றுக் கொண்டவன். அவரே பகத்சிங்கிற்கு துப்பாக்கி சுடுவதற்கும்,  வெடிகுண்டு வீசுவதற்கும் பயிற்சியளிக்கிறார்,


பின்னர்,  இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928 இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே லஜபதி ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் லஜபதிராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார்.

பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை  என்றாலும் லஜபதிராயின் மரணத்திற்கு பழி வாங்க உறுதி பூண்டு  சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார்.  ஆனால் பகத்சிங்கிற்கு , ஸ்காட்டிற்குப் பதிலாக தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் பகத்சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர். சான்டர்சை கொலை செய்த பின்பு  பகத்சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். 

பின்னர் சைமன் கமிஷனுக்கு எதிராக,   1927 இல் மத்திய சட்டமன்ற மண்டபத்தில் பகத்சிங் , தோழர்களுடன் சேர்ந்து குண்டு வீசி , பிரசுரங்களைப் போட்டுவிட்டு , முழக்கங்களை எழுப்பி , தப்பியோடாமல் சரணடைந்தார். " செவிடர்களை உசுப்பி விடுவதற்கான இடியோசை இது " என்றும் " கேளாத செவிகள் கேட்கட்டும்" இந்த நடவடிக்கையை விவரித்தார். இவ்வழக்குடன் சாண்டர்ஸ் கொலை வழக்கு விசாரணையும் சேர்ந்து கொண்டது. 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ந் தேதி, ஆங்கில சிறப்பு நீதிமன்றம் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர்களுக்கு தூக்குத் தணடனை விதித்தது. 

பகத்சிங் , மேற்கு பஞ்சாபிலுள்ள மியான்வலி சிறைச்சாலையில் இருந்தபோது , சிறை வசதிகளை மேம்படுத்தக்கோரி தோழர்களுடன் சேர்ந்து மொத்தம் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தண்ணீர் கூட அருந்தாமல் அவர்கள் நடத்திய  கடுமையான உண்ணாவிரத போராட்டம் ஆங்கில அரசாங்கத்தை உலுக்கியது. அப்போராட்டத்தை உடைக்க சிறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும்  பகத்சிங்க்கும் , தோழர்களும் முறியடித்தார்கள். 63 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு யதீந்திரநாத் தாஸ் உயிழந்தார். சிறையதிகாரிகள்  அவரது உண்ணாவிரதத்தை முறிக்க வலுக்கட்டாயமாக பாலைப் புகட்டும் போது , அது மூச்சுக்குழாயில் நுழைந்து அவரது உயிரைப் பறித்தது. வீரம் செறிந்த இப்போராட்டம் அவர்களின் மனஉறுதியைக் காட்டியது. 

ஆனாலும் , சிறையில் அப்புரட்சி வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே  காலம் கழித்தனர்.  நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் விடுவதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. பகத்சிங்கின் தந்தை  தூக்குத்தண்டனைக்கு எதிராக கருணை மனு கொடுக்க கேட்ட பொழுது அதை தீவீரமாக மறுத்துவிட்டார். தமது தாய் நாட்டிற்காக உயிர்துறப்பதை மிகவும் விருப்பத்துடன் வரவேற்பதாகவும் , அதுவே இந்திய இளைஞர்களை புரட்சிக்கு தூண்டும் சக்தியாக இருக்கும் என்று திடமாக நம்பினார்.



பகத்சிங்கும் மற்றும் அவனது தோழர்கள் சுகதேவ் ராஜகுரு ஆகியோர்கள்  23-03-1931 ந் தேதி லாகூர் சிறையில் மாலை 07-28 மணிக்கு ( வழக்கத்திற்கு மாறாக) தூக்கிலிடப்பட்டனர். தூக்கு மேடைக்கு செல்லும் போது மூவரும் மணமேடைக்கு செல்லும் மாப்பிள்ளைகள் போல் உற்சாகத்துடன் சென்றனர். முகத்தில் கறுப்புத்துணியை கூட அணியாமல் , தங்களாவே தூக்குக்கயிற்றை எடுத்து மாட்டிக்கொண்டு , " இன்குலாப் ஜிந்தாபாத் ; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக" என்று முழங்கினார். அந்த புரட்சி வீரர்களின் உயிரை ஆங்கில அரசாங்கம் பறித்துக் கொண்டது. தேசமே துயரத்தில் ஆழ்ந்தது. 

பகத்சிங் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு நூல்களை படித்து பல குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அக்குறிப்புகள் " பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள்" என்ற தலைப்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. அதே போல் , அவர் எழுதிய  " நான் ஏன் நாத்திகனானேன் " என்ற புத்தகமும் மிகவும் புகழ் வாய்ந்தது. 

இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும்  பகத்சிங்கும் அவனது தோழர்களும் அன்று ஏற்றிய புரட்சித் தீயை இன்றும் நினைவு கூறுகிறார்கள். எங்கெல்லாம் " இன்குலாப் ஜிந்தாபாத்" , புரட்சிஓங்குக என்ற  குரல் எழுகிறதோ , அங்கெல்லாம் அந்தக் குரலுக்குச்  சொந்தக்காரனாக  பகத்சிங்கின் நினைவுகள் எழுந்தே தீரும். திருவள்ளுவர் குறிப்பிட்டது போல்  மரணத்தை நோக்கி முள்படுக்கையில் வாழ்ந்த போதும் கலங்காத மாபெரும் புரட்சியாளன் பகத்சிங்.