Saturday 9 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம் 8

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


அதிகாரம்: மருந்து. குறள்: 948

  
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.( மு.வ. உரை)


நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும் (சாலமன் பாப்பையா உரை ).


இந்தக் குறளுக்கு பொருத்தமாக வாழ்ந்து மறைந்தவர் மருத்துவர். சாமுவேல் ஹானிமேன் அவர்களே. இவரே மருத்துவ உலகத்தையே புரட்டிபோட்டு புதிய வரலாறு படைத்தவர் . 



ஜெர்மனி நாட்டில் உள்ள மெய்சன் நகரில் கி.பி 1755 ஆம் ஆண்டு எப்ரல் 10 இல் ஒரு ஏழை மண்பாண்ட தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் . தூயஉள்ளம், கடின உழைப்பு ,நேர்மை தவறாத பண்பு போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர். மருத்துவம் என்ற பெயரில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் அடிப்படையான காரணங்களை தெரிந்து கொள்ளாமல் ,சூடு போடுதல் ,ரத்தத்தை வெளியேற்றுதல், தனிமைபடுத்துதல்  போன்ற மிருகத்தனமான சிகிச்சை முறைக்கு சாவு மணியடித்தவர் . ஹோமியோபதி என்ற புதிய மருத்துவ முறையை தனியொரு மனிதனாக கண்டெடுத்த மாமேதை.


 கி.பி  1790 இல் மரு. கல்லன் என்பவரின் மருத்துவ புத்தகத்தை மொழிபெயர்க்கும் பொழுது சின்கோனா மருந்தின் மூலம் ஹானிமனுக்கு ஏற்பட்ட தெளிவு அதாவது எப்பொருள் ஒரு நோய் தன்மையை உருவாக்குகிறதோ அப்பொருள் அதே நோய் குறிகளை சரிசெய்யும் அல்லது குணபடுத்தும் . இதுவே ஒத்ததை ஒத்தது போக்கும் என்ற தத்துவம். இதை ஜெர்மனி மொழியில்”Simillia Similibus Curentur” என்றும், ஆங்கிலத்தில்”Like cures Like” என்றும் அழைக்கபடுகிறது. அதன்பிறகு ஹோமியோபதி மருந்துகளை நிருபணம் செய்ய ஆரம்பித்தார் .


அவரது ஆய்வுகளை கி.பி 1796 இல், ” An essay on a new principle for ascertaining the curative powers of Drug”. என்ற கட்டுரையாக  வெளியிட்டார். இதுவே ஹோமியோபதியில் வெளிவந்த முதல் கட்டுரை. ஹானிமன் தமது வாழ்நாளில் 99 ஹோமியோபதி மருந்துகளை நிருபணம் செய்துள்ளார். இந்த மருந்துகளின் தொகுப்பே "மருந்து காண் ஏடு" (MATERIA MEDICA) என்று அழைக்கப்படுகிறது . உயிரும் உணர்வும் உள்ள மனிதர்களிடம் நிரூபணம் செய்து பெறப்பட்ட  மருந்துகளின்  மூலம் , அதே நோய்குறிகளை உடைய மனிதர்களுக்கு , அதே ஒத்த மருந்தைக் கொடுத்து  மனிதர்களை முழுமையாக நலப்படுத்துவது  ஹோமியோபதி மருத்துவம்.


அதன்பிறகு தொடர்ந்து ஆய்வு செய்து ஹோமியோபதிக்கான ஒரு தத்துவத்தையும் உருவாக்கினர். அது கி.பி.1810 இல் ,” ORGANAN OF THE RATIONAL ART OF HEALING”  என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். சுருக்கமாக " ORGANAN" என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் மருந்துகளின் தொகுப்பான “MATERIA MEDICA PURA”  மற்றும் “CHRONIC DISEASES” போன்ற நூல்களையும் எழுதி ஹோமியோபதிக்கு உயிர் ஊட்டினார். இந்நூல்களே ஹோமியோபதிக்கு மூலம்.அதனால் ஹானிமன் " ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை " என்று அழைக்கப்படுகிறார்.


ஏறத்தாள 53 ஆண்டுகள் ஹோமியோபதிக்கு உழைத்த அந்த பெருந்தகை கி.பி.1843 இல்( 02/07/1843) மறைந்தார். தான் இறந்த பிறகு தமது கல்லறையின் மீது  " நான் என் வாழ்வை வீணாக கழித்துவிட வில்லை " என்று எழுதி வைக்குமாறு தமது சீடர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். அவ்வாறே பாரிசில் உள்ள அவரது கல்லறையின் மேல் எழுதியும் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் பிறந்தாலும் திருவள்ளுவரின் இக்குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்  மருத்துவர். சாமுவேல் ஹானிமேன்.


No comments:

Post a Comment