Sunday 18 June 2017

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்



சடகோபன்

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு (2007 இல் ) மதுரை நாராயணபுரம் பகுதியில் "புத்தகத்தூதன்" என்ற பெயரில் சிறிய புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தவர் தான்  இந்த சடகோபன். எனது நண்பர் ஒருவரின் பணி ஓய்விற்கு பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க தேடிப்பிடித்து அந்தக்கடைக்கு சென்றேன். அது ஒரு சிறியகடை என்பதால் அதிக புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நூல்களை என்னால் வாங்கித் தர முடியும் என்று புன்னகையோடு கூறினார். இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது.கூடவே அவர் எனது நண்பர் வா.நேருவின்  நெருங்கிய நண்பர் என்பதும்  தெரிய வந்தது. பெரியாரையும் , அவரது கருத்துக்களையும் உயிராக நேசிக்கும் மனிதர். இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

இன்று எனது இல்லத்தில் தரமான ஒரு நூலகம் இருக்கிறதென்றால் அதற்கு நண்பர் சடகோபன் தான் காரணம். அவரின் இனிய குணம்,  நேர்மையான வியாபாரம் ,தந்தைப் பெரியாரின் கொள்கைகளின் மீது ஆழ்ந்தபற்று போன்ற காரணங்கள் எங்களின் நட்பை ஆழப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் மட்டுமே ஒருவர் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது மிகச்  சிரமமான காரியம். முதலீட்டுத் தகுந்த இலாபம் கிடைப்பதில்லை.  அதிலும் தான் விற்பனை செய்யும் எல்லாப் புத்தகங்களுக்கும், நண்பர் சடகோபன் 10% கழிவு தருவதில் தயக்கம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த புத்தகக்கடை என்பது ஒரு " தொண்டு" அல்லது ஒரு " கடமை " என்றே மகிழ்ந்து வந்தார். தகவலின் பேரில் பலரின் வீடுகளுக்குச் சென்று கூட புத்தகங்களை கொடுத்து வந்துள்ளார். பல மத்திய , மாநில அரசுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளைத் தேடித்பிடித்து அங்கு புத்தக அரங்கு போட்டுள்ளார்.

ஆனாலும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் நாராயணபுரத்தில் இருந்து நத்தம் ரோடு மற்றும் ஆத்திகுளம் பகுதிகளுக்கு தமது கடையை மாற்றிக் கொண்டே இருந்தார். போதுமான வருமானம் இல்லாததால் அவரின் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் முழுக்க புத்தகங்களும் ,சேவையுமே நிறைந்திருந்ததால் அவரால் வேறு பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட இயவில்லை. ஒரு நாள் அவரது புத்தககடைக்குச் சென்றபொழுது கடை பூட்டப்பட்டிருந்து . என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் மிகவும் வலித்தது. அவருடன் கைபேசியில் தொடர்பு கொண்டபொழுது திருச்சியில் உள்ள  ஒரு புத்தக்கடையில் தற்காலிகமாக  பணியில் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் புத்தகங்களை விட்டு தன்னால் விலகி இருக்க முடியாது என்றும் வேறொரு திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று

அவரின் தணியாத தாக்கத்தினாலும்  விடாமுயற்சியினாலும்   ஒரு சிறிய ரக கூண்டு வண்டியை வாங்கி அதில் " நகர்வு புத்தகச் சந்தையை " அமைத்துவிட்டார்.  இந்த நகர்வுச் சந்தையை கடந்த 28/08/2015 ந் தேதி திரு கு. சாமித்துரை,வழக்கறிஞர் மற்றும் தலைவர்,(MMVA) தமிழ் இலக்கிய மன்றம் மதுரை துவக்கி வைத்தார். இன்று புத்தகதூதனின்  நகர்வு புத்தகச் சந்தைமக்கள் கூடும் பகுதிகளிலெல்லாம் காத்திருக்கிறது.



இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் வா.நேரு நல்ல புத்தகங்களை விற்று அதில் தான் வாழ்க்கை நடத்துவேன்  என வாழ்பவர் சடகோபன் என்றும் கையைச் சுட்டுக் கொண்டாலும் மீண்டும் புத்தக விற்பனையை வேறு வகையில் யோசிப்பவர் என்றும் தெரிவித்தார். தோழர்.சங்கையா , "அறிவு வீடு தேடி வருகிறது" என்று மகிழ்ச்சியை தெரிவித்தார் .

ஒவ்வொரு வீட்டிலும் தரமான 100 புத்தகங்களாவது  இருக்க வேண்டும் என்பதே சடகோபனின் கனவு.  இந்தக் கனவுகளுடன் மதுரையின் வீதிகளை சளைக்காமல் சுற்றி வருகிறார் புத்தகத்தூதன் சடகோபன் (அவரின் கைபேசி : 94433 62300). சமூகத்தை நேசிக்கும் இவரைப் போன்றவர்கள் கட்டாயமாக  வெற்றி பெறவேண்டும்.


No comments:

Post a Comment