Monday 9 July 2012

வண்ணாமுட்டியின் காதல்


வண்ணாமுட்டி மரணத்தின் விளிம்பில் அந்த தெரு மின்கம்பத்தின் கீழே ஒரு கயிற்றுக் கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தான். அப்போது மயக்கத்தில் இருந்தான். அனேகமாக பிழைப்பது கடினம் என்று எனக்குத் தோன்றியது. ஆம்! அவன் அரளி விதைகளை அரைத்து விழுங்கி  இருந்தான் .  அதுவரை பெண்கள் தான் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது எனக்குத் தெரியும். முதல் தடவையாக ஒரு ஆண்மகன் , அதுவும் வண்ணாமுட்டி போன்ற தைரியமானவன் தற்கொலைக்கு துணிந்தது எனக்கு ஆச்சரியமாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது.  நேரமாகிக் கொண்டிருந்தது. வண்ணாமுட்டியின் அப்பா இன்னும் வரவில்லை. அவர் வந்தவுடன் தான் இவனை ஆஸ்பத்தரிக்கு தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அப்போது எனக்கு வயது பனிரெண்டு இருக்கும். வண்ணாமுட்டி எனக்குப் மிகவும் பிடித்தமானவன். கபடி, கிளித்தட்டு மற்றும்  கிட்டி போன்ற விளையாட்டுகளை எனக்குக் கற்றுக் கொடுத்தவன். ஆனால் என்னைவிட ஏழு அல்லது எட்டு வயது கூட இருக்கும். சமீபத்தில் தான் திருமணம் செய்திருந்தான். அவன் மனைவி கருப்பாயி  பத்து தினங்களுக்கு முன்பு  தான் இதே மாதிரி பருத்திக்கு தெளிக்கும் ரோகர் மருந்தை குடித்து விட்டு இறந்து போனாள்.  அந்த சோகமே இன்னும் நீங்கிய பாடு இல்லை . இப்போது இவன் வேறு சாவை நெருங்கி கொண்டு இருக்கிறான். அவனது நண்பர்களும் சொந்தங்களும் கவலையோடு அவனையே  பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே அவனது அம்மாவும் தம்பியும் தங்கையும்  தீ விபத்தில் இறந்து போயிருந்தார்கள். இவனது அப்பா உடனே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இவன் மேல் அவ்வளவு பாசம் இல்லை என்று புரிந்து கொண்டேன். ஒருவேளை வண்ணாமுட்டி திருமணம் செய்து கொண்டதில் ஏதாவது பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்போது இலேசாக புரண்டு எழுந்தான் வண்ணாமுட்டி. என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாதீர்கள் ! சாக விடுங்கள்! நான் கருப்பாயி போன இடத்துக்கே போக வேண்டும் ! என்று அழுதான். அப்புறம் என் அப்பா வந்தால் என்னை தொட விடாதீர்கள் என்று யாரிடமோ கூறினான்.   அப்போது மாலை ஏழு மணி இருக்கும் .  வண்ணாமுட்டியின் அப்பா வந்தார்.  அவர் முகத்தில் எந்தச் சலனமும் தெரியவில்லை. ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க என்றார்.

இரவு ஒன்பது  மணி . வண்ணாமுட்டி பிணம் அதே இடத்தில் அதே கயிற்று கட்டிலில் கிடத்தப் பட்டு இருந்தது. சில மணி நேரங்களுக்கு முன்னே உயிரோடும் உணர்வோடும் இருந்த ஒரு மனிதன் தமது கவலைகளை மறக்க இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டான். அவனது பெயர் அந்தக் கிராமத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. எனக்கு பெரிய சந்தேகம். வண்ணாமுட்டி ஏன் தற்கொலை செய்து கொண்டான் ? .

விடை...கருப்பாயி!

கருப்பாயி , கறுப்பாக இருந்தாலும் அழகானவள். அவளுக்கும் காளைக்கும் காதல். காளை , எங்கள் கிராமத்திலே கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் கருப்பாயி , ஒரு கூலித் தொழிலாளியின் மகள். இவர்களது காதலுக்கு வித்தாக இருந்தவன் வண்ணாமுட்டி. வண்ணாமுட்டியும் காளையும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் சொல்லபோனால் காளையின் காதலை உற்சாகப் படுத்தியதே வண்ணாமுட்டியே தான்!     பின் எப்படி வண்ணாமுட்டி  கருப்பாயியை  திருமணம் செய்து கொண்டான்?. இங்கே தான் ஒரு துரோகத்தின் வரலாறும் , தியாகமும் உருவானது.

அந்தக் காலங்களில் கிராமப் பகுதிகளில் காதல் கொள்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். காதலர்கள் , மிகவும் கண்ணியமாகவும் , கட்டுக்கோப்பாகவும் நடந்து கொள்வார்கள் . தொட்டுக்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால் காதலுக்கு மிகவும் மரியாதை இருந்தது. அவ்வாறு தான் கருப்பாயிம் இருந்தாள். ஆனால் காளைக்கு அவளின் இளமையான அழகு,  மயக்கத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு முன்பே அவளை அடைந்து விடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. அவளிடம் கூறினான். மறுத்து விட்டாள். அதனால் அவர்களுக்கிடையே ஊடல் ஏற்பட்டது. நண்பன் வண்ணாமுட்டி அவர்களது ஊடலை தனித்து சேர்த்து வைத்தான். காளை , கருப்பாயிக்கு சத்தியம் செய்து கொடுத்தான்! கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று. ஒரு நாள் இரவு , அந்த உயிர்கள் சங்கமித்தன. வண்ணாமுட்டியே அதற்க்கு சாட்சி!

நாட்கள் நகர்ந்தன ! கருப்பாயி கர்ப்பவதியானாள் . ஒரே பயம். திகில் மற்றும் வரப்போகும் அவமானம் அவளை கவலைக்குள்ளாகியது. அழுதாள்! காளையிடம் உடனே திருமணதிற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். காளையும் அவனது அப்பாவிடம் அனுமதி கேட்டான். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. காளையின் அத்தைமகளை அவனுக்கு திருமணம் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. காளை கருப்பாயியை மறந்து விட்டான்! ஒரு நம்பிக்கைத் துரோகத்தின் சுவடு அவன் மேல் பதிக்கப்பட்டது.


வண்ணாமுட்டி மனதிற்குள்ளே புழுங்கினான். காளையுடன் சண்டைக்குப் போனான். அவனது துரோகத்தை பழித்தான். கருப்பாயியை  திருமணம் செய்துகொள்ளுமாறு   காளையை  நிர்பந்தம் செய்தான். இருந்தாலும் பலன் கிடைக்கவில்லை. மனதிற்குள்ளே அழுதான். ஒரு துரோகத்திற்கு உடந்தையாகி விட்டாயே! என்று அவனது மனம் பழித்தது. தீர்க்கமான  அந்தமுடிவை எடுத்தான்.  ஆம்! தானே கருப்பாயிக்கு வாழ்வு கொடுப்பது! அவளை திருமணம் செய்து கொள்வது. அவளுக்கு வாழ்வளிக்க துணிந்து விட்டான் வண்ணாமுட்டி. ஆனால் ,  கருப்பாயி அவன் முடிவை ஏற்றுகொள்ள வேண்டுமே ? 

ஆம்! கருப்பாயி , அவனது முடிவை ஏற்க மறுத்துவிட்டாள். நான் கெட்டுப்போனவள், உனக்கு பொருத்தமானவள் அல்ல. நீ வேறு திருமணம் செய்து கொள் என்று உறுதியாக கூறிவிட்டாள். அப்பொழுது தான் வண்ணாமுட்டி மனம் திறந்து அந்த உண்மையை கூறினான் .  அவளை  தானும் விரும்பியதாகவும்,  ஏழையான நம்மை அவள் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்று நினைத்து அவளுடன் சொல்லவில்லை  என்றும் ,  தமது மனதில் நீண்ட நாட்களாக பூட்டிவைக்கப்பட்டிருந்த அந்தக் காதலைக் கூறினான்.  இருவரும் அழுது கொண்டார்கள்.


வண்ணாமுட்டி , அவளை சமாதானப் படுத்தினான். அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு தானே தந்தை என்று கூறிவிடுகிறேன் அதனால் இந்த உலகம் உன்னைப் பழிக்காது என்று ஆறுதல் கூறினான்.   மோசமான விமர்சனத்தை எதிர் நோக்கியிருந்த கருப்பாயிக்கு  இதைவிட்டால் வேறு வழி தெரியவில்லை. அரைகுறை மனதுடன் சம்மதித்தாள். இப்படித்தான் வண்ணாமுட்டி கருப்பாயி திருமணம் சில நண்பர்களின் வாழ்த்துகளுடன் ஒரு கோவிலில் நடந்தது.


ஆனால் அதன் பிறகு நடந்தவைகள் அவர்களுக்கு எதிராகவே  இருந்தது. வண்ணாமுட்டியின் திருமணத்தை அதனுடைய அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை.  சொந்தபந்தங்கள்  தூற்றின ! கருப்பாயி அவமானத்தால் கூனிக் குறுகிப் போய்விட்டாள். வண்ணாமுட்டி கொடுத்த அந்த உன்னதமான வாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. வெறுத்துப்போன கருப்பாயிக்கு தோன்றியது அவளது தற்கொலையே!.  வண்ணாமுட்டியின்  காதல் மீண்டும் தோற்றுப்போனது, அது மட்டுமல்லாமல் அவனது தியாகமும்  நிலைக்கவில்லை. 

வண்ணாமுட்டி மிகவும் துவண்டு விட்டான். எந்த மான, அவமானங்களுக்கும் பயப்படாத அந்த  மாமனிதனை கருப்பாயி மரணம் நிலை குலையச் செய்துவிட்டது.  அவள் இல்லாத இந்த உலகத்தில் அவனும் வாழ விரும்பவில்லை.  அவனுடைய  மரணத்தை அவனே தேடிக் கொண்டான். 

வண்ணாமுட்டி எனக்கு கோழையாக தெரியவில்லை  வஞ்சிக்கப்பட்ட மனிதனாகத் தான் தெரிந்தான். அவனுக்கு யாரும் ஆதரவுக்கரம் நீட்டாதது ஏன் என்றக் கேள்வி நீண்ட நாட்கள் எனக்குள் இருந்தது.  எங்கள் கிராமத்திற்கு நான் செல்லும்போதெலாம்  மௌன சாட்சியாக இன்றும் இருக்கிற அந்த மின் கம்பம் எனக்கு வண்ணாமுட்டியை  ஞாபகப் படுத்த தவறுவதில்லை! .

No comments:

Post a Comment