Thursday 19 July 2012

யானையின் கோபம் !



அது 1991  ஆம் ஆண்டில்  ஒருநாள். காலை பத்து மணியிருக்கும். உசிலம்பட்டி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அந்த  யானை பிளிறியவாறு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. அது ஒரு பெண் யானை. அதற்கு மதம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அருகே நின்றுகொண்டிருந்த  ஒருவன் அங்குசத்தால் யானையின் காதருகே குத்திக் கொண்டு இருந்தான் . இன்னொருவன் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அதன் கால்களுக்கிடையே ஒருவன் அலறியவாறு கிடந்தான். ஒரு நிமிடம் பயத்தில் அப்படியே உறைந்துவிட்டேன். 

காரணம், என்னுடன் ஏழுமாதக் கர்ப்பிணியான என் மணைவி. அவளால் வேகமாக வேறு ஓடமுடியாது . எனக்கு திகிலாகி விட்டது. ஏனென்றால் எங்களுக்கும் அந்த யானைக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். அப்பொழுது அந்த யானை தனது தும்பிக்கையால்  நுழைவு  வாயிலின்  மேற்குப் பக்கத்தில் உட்புறமாக இருந்த ஒரு கடையின் மேற்கூரையை கோபத்துடன் பிடித்து இழுத்தது. அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி கொண்டு என் மனைவியை இழுத்துக் கொண்டு பஸ் நிலையத்தின் உள்ளே வேகமாக ஓடினேன் அப்பாடி!  நாங்கள் தப்பி விட்டோம். ஆனால் அவன்?. 

என்ன நடக்கிறது என்று கொஞ்சம் திரும்பப் பார்த்தேன். அப்பொழுதும், அவன் அந்த யானையின் கால்களுக்கு இடையில் தான் மாட்டிக் கொண்டு இருந்தான். அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் உருண்டு விலக முயலும் போதெல்லாம் அந்த முயற்சியை முறியடித்து அவனை தமது கால் பகுதிக்குள்ளே வைத்துக்கொண்டது. ஏதோ கால்பந்து விளையாடுவது போல் தமது கால்களின் எல்லையை விட்டு விலகாமல் அவனை வைத்துக் கொண்டது. ஆனால் அதன் வாலைப் பிடித்து இழுத்து கொண்டு இருந்தவனையும், அங்குசத்தால் குத்திக் கொண்டு இருந்தவனையும் அந்த யானை தாக்க முயற்சிக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாகத்  தெரிந்தது . ஏனென்றால் மதம் பிடித்திருந்தால் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் தூக்கி எறிந்து துவம்சம் செய்து இருக்கும். அப்படிச் செய்யாததால் அதற்கு ஏதோ கோபம் ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டேன்.

ஆம். மனிதன் எத்தனை சுயநலமானவன்?. சுதந்திரமாகத் திறியும் பறவைகளைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்துக் கொள்கிறான். குரங்கினைப் பிடித்து வசக்கி பிச்சை எடுக்க வைக்கிறான். சிங்கம், புலி மற்றும் கரடி போன்றவற்றைப் பிடித்து பழக்கி சர்க்கஸ் காட்டுகிறான். பாவம் இந்த மிருகங்கள் எல்லாம் தமது சதந்திரத்தைசுபாவத்தை இழந்து அடிமைப் பட்டுப்போயின.  அதுமட்டுமா? சாதிக் கோட்பாடுகளை வகுத்து மனிதனையும் அடிமையாக்கிக் கொண்டான். இந்த அடிமைகள் எல்லாம் விழித்துக் கொண்டால் என்ன நடக்கும்? . அது இவ்வாறு தான் இருக்கும்! என்று எனக்கு தோன்றியது!.

அந்த யானைக்கும், அவனுக்கும் இடையிலான போராட்டம் ஒரு பத்து நிமிடம் நடந்திருக்கும். பிறகு அந்த  யானை மெதுவாக தமது முன்புற வலது காலைத் தூக்கி அவனது மார்பு மேல் வைத்து பலமாக அழுத்தியது. அவன் கத்தவில்லை , இரத்தம் கக்கவில்லை, ஆனால் உயிர் சத்தமில்லாமல் பிரிந்தது. கூடியிருந்த கூட்டம் அலறியது.   எல்லோருமாகச் சேர்ந்து அந்த யானையை அடித்து தேனீ சாலையில் விரட்டினார்கள். இதை ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பே செய்திருந்தால் பெயர் தெரியாத அந்தச் சகோதரனையாவது காப்பாற்றி இருக்கலாம் . பாவம் அவன். 

அப்பொழுதும் பதட்டம் தணியாத என் மனைவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சூடாக ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்தேன். சில மணித்துளிகள் ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். பின்னர் வெளியே வந்து எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். அப்போது, தேனீ சாலையில் விரட்டப்பட்ட   அந்த யானை மெதுவாக ஆடி அசைந்து  திரும்பி வந்தது.  கூடவே அந்த இரண்டு பாகன்களும் வந்தார்கள். அதனிடம் கொஞ்சமும் சீற்றம் இல்லை! அமைதி  என்றால் அப்படி ஒரு அமைதி !  எனக்கு இப்பொழுதும் பெரிய ஆச்சரியம்! கூடவே சில கேள்விகளும். அந்த யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது? ஏன் அவன் ஒருவனை மட்டும் கொன்றது? அவன் யார்?
 
எனக்கு மேற்கண்ட கேள்விகளுக்கான விடை தெரிய மாலை நான்கு மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நண்பர் பாலுச்சாமி அந்தப் பதில்களுடன்  வந்தார். செத்துப் போனவன் தான் அந்த யானையின் உண்மையான பாகன். அவன் அந்த யானையை கடுமையாகக் கொடுமைப்படுத்தி இருக்கிறான்.  ஓய்வில்லாமல் பிச்சை எடுக்க வைத்து இருக்கிறான். சரியாக உணவிடுவதில்லை. புல், இலை தலைகளுக்கு பதிலாக, எச்சில் இலைகளை  அதுவும் அசைவப்  புரோட்டாக் கடைகளில் கொட்டப்படும்   இலைகளை அள்ளித்தான் அதற்கு உணவாக கொடுத்து இருக்கிறான். கடித்து எறியப்பட்ட எலும்புகளாலும் , நாற்றத்தாலும் அது சாப்பிட தயங்கும் போதெல்லாம் அங்குசத்தால் அடித்து துன்புறுத்தி இருக்கிறான். பரந்த வனப் பகுதியில் எல்லா இயற்கை வளங்களோடு சுதந்திரமாக வாழ்ந்து வந்த அந்த யானைக்கு கிடைத்த அவல வாழ்க்கையைப் பார்த்தீர்களா! அதனுடைய கோபம் நியாயம் தானேஅவன் தண்டிக்கப் பட வேண்டியவனே! அதன் பிறகு அவன் சாவின் மீது எனக்கு இரக்கம் தோன்றவில்லை .
 

தற்பொழுது நான் மதுரைக்கு குடிபெயர்ந்து விட்டேன்.  இங்கும் தெருக்களில் யானைகள் பிச்சையெடுப்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்! 

No comments:

Post a Comment