Tuesday 3 July 2012

வேலாண்டி




வாழ்க்கைப் பாதையில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை நான் கடந்து வந்துள்ளேன்.  அவர்களில் இவரையே என் முதல் ஆசிரியனாகவும் , வழிகாட்டியாகவும் எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இந்தச் சமூகத்தில் எனக்கு ஒரு  அடையாளத்தையும், எனது வளமான வாழ்க்கைக்கு  உரமாகவும் இருந்தவர். இவரிடமிருந்தே நான் நேர்மையையும் , ஒழுக்கத்தையும் , கடமையையும் ஏன் நேசித்தலையும் கற்றேன். 

அப்போது எனக்கு வயது பதினாறு. பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லவேண்டிய தருணம். நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்களில் நானும் ஒருவன்.அதனால் மதுரை அமெரிக்கன் கல்லூரி என்னை சுலபமாக சுவீகரித்தது. கல்லூரி துவக்க நாளுக்கு (பழைய PUC) முதல் நாள் மாலை ஆறு மணிக்கு  நானும் எனது தாத்தாவும் பாட்டியும் கையில் இரண்டு நாட்களுக்கு தேவையான கட்டுசோற்றுடன் கல்லூரியின் வாயிலில் நின்றோம். 

ஆம்! வேலாண்டி எனது தாத்தா தான். நான் அவருடைய மூத்த மகள் வயிற்றுப் பேரன்.

கல்லூரியின் வாயிற்காவலன் எங்களை ஏற இறங்கப்பார்த்தார். நான் , எனக்கு வந்திருந்த கல்லூரியின் ஒப்புதல் கடிதத்தைக் காட்டினேன். உடனே அவர்,  கல்லூரி விடுதிக்கான கட்டணத்தை கட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். இல்லை! நாளை தான் கட்டவேண்டும் என்றேன் . அப்படியென்றால் நாளைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டார். நாங்கள் மதுரைக்கு புதியவர்கள். இங்கே எங்களுக்கு உறவினர்களும் கிடையாது. அதேபோல் வெளியில் அறை எடுத்து  தங்கும் பழக்கமும் எங்களுக்கு இருந்ததில்லை. அதனால் எனது தாத்தா அந்த வாயிர்க்காவலாளிடம் நாங்கள் கல்லூரியின் ஒரு மூலையில் தங்கிக் கொள்கிறோம் என்று அனுமதி கேட்டார். அவரும் பெருந்தன்மையோடு அனுமதித்தார். அதற்க்குக் காரணம் அவரது தோரணை தான். ஏறத்தாழ ஆறடி உயரம் , சுத்தமான வெண்மையான உடை மற்றும் முகத்தில் தெரிந்த  கிராமத்து நாட்டாண்மையின் அனுபவமுதிர்ச்சி போன்றவைகள் அந்தக் காவலாளிக்கு அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

அப்புறம்  அந்தக்காவலாளி ,  இந்தப்பையன் யார்? என்றார் ஆர்வத்துடன்.

எனது மகள் வயிறறுப்பேரன் என்றார் தாத்தா. இந்தப் பதில் அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறன். உடனே என்ன மனிதனையா நீ ! போயும் போயும் மகபுள்ளே பேரனையா படிக்க வைக்கிறாய், அவன் உன்னை விட்டு போய் விடுவானே! அவனால் உனக்கு எந்த பிரயோசனமும் இருக்காதே! என்றார்.

போகட்டும். "ஆனால் இது என் கடமை. எனது மகளுக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் என்றார். என் மூத்த மகள் பள்ளிக்கூடம் செல்லதாவள். நானும் படிக்காதவன் தான் , ஆனால் என் பேரன் நன்றாகப்  படிப்பான். நல்ல வேலைக்குச் சென்று என் மகளை கவனித்துக் கொள்வான்" என்றார் தாத்தா. ஆம்! அவ்வளவு நம்பிக்கை என் மேல். இந்த வார்தைகள் எனது மனதில் ஆழமாக பதிந்து போன கல்வெட்டுக்கள் . எனக்கு நினைவு இருக்கும் வரை அழியாது.  

ஒரு முறை என் தாத்தாவைப் பார்க்க எனது இரண்டு சித்திகளும் வந்தார்கள். அப்பொழுது நான் BA  முதலாம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியிலே படித்துக் கொண்டு இருந்தேன் . எனது சித்திகள் அவர்களுடைய குழந்தைகளையும் என்னை படிக்க வைப்பது போல் எனது தாத்தாவே படிக்க வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியப்பட முடியாத காரணத்தால் மறுத்துவிட்டார். ஆம்!  அப்பொழுது விவசாயம் பொய்த்து போனதால் எங்களது குடும்பம் சற்று சிரமத்தில் இருந்தது. என்னை சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்தவர்கள் என் சித்திகள் தான். அவர்களின் அழுகை என்னை பாதித்தது.    அதேபோல் எனது தாய் மாமன்களும் அப்போது எனது தாத்தாவுடன் மனஸ்தாபத்தில் இருந்தார்கள். அதுவரை கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களும் தனிக்குடித்தனம் செல்ல ஆசைபட்டார்கள்.  சூழ்நிலை எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. முதல்முறையாக எனது மனம் வலியின் சுவையினை அனுபவித்தது.
 
இருந்தாலும் எனது தாத்தா என் விசயத்தில் மிக உறுதியாக இருந்தார். குடும்பத்தின் குழப்பங்களில் இருந்து என்னை பாதுகாத்தார். அடுத்த முறை என் அம்மா வந்தார்கள். அவருடைய திருமணத்தின் போது நகை நட்டுகள் எதுவும் போடாததால் இப்போது கேட்க வந்திருந்தார். தங்கைகளுக்கு மட்டும் தலா பத்து சவரன் நகை போட்டது அவரது மனதில் உறுத்திக் கொண்டு இருந்திருக்கும். இந்தச் சமயத்திலும் என் தாத்தா கோபப் படவில்லை. பொறுமையாக இவ்வாறு பதில் அளித்தார். ஆமாம்மா! உனது திருமணத்தின் போது அவ்வளவு வசதி இல்லையென்று உனக்கே தெரியும். இருந்தாலும் உனக்கு போதுமான உதவிகளை செய்து வருகிறேன் (பல ஆண்டுகளாக உணவு தானியங்கள் கொடுத்துவந்துள்ளார்).  என் கடைசி காலத்திற்குள் உனக்கு சேர வேண்டியதை செய்து விடுவேன். இல்லையென்றால் என் பேரன் பார்த்துக் கொள்வானம்மா! கவலைப்படாதே! என்றார். என் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அவரின் அந்த தெளிவான பார்வை, நிதானம், நம்பிக்கை போன்ற பண்புகள் எனக்குப் பாடமாகவே இருந்தது. எனது பல வெற்றிகளுக்கு இவைகளே காரணமாக இருந்து வந்துள்ளன.   

இந்தச் சூழ்நிலையில் கி.பி.1981  இல், நான் BA  இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு தொலைபேசித் துறையில் டெலிபோன் ஆப்பரேட்டர் வேலை தேடி வந்தது. சந்தோசமாக ஏற்றுக்கொண்டேன். எனது 20  வது வயதிலே மத்திய அரசுப் பணியிலே சேர்ந்தேன். செழிப்பான நிலத்தில் வளரும் பயிர் நல்ல பலனைத் தரும் என்பதற்கு உதாரணமாக என்னையே நினைத்துக் கொள்வேன்.

வாழ்க்கை சந்தோசமாகவே சென்றது. நான் வாங்கும் சம்பளத்தை அப்படியே என் தாத்தாவிடம் கொடுத்து விடுவேன். எனக்கு தேவையானதை அவரிடமே திரும்பவும் கேட்டு வாங்கிக் கொள்வேன். என் தாத்தா மனம் விரும்பியவாறு சந்தோசமாக வாழ்ந்தார். இப்படியாக இரண்டரை ஆண்டுகள் முடிந்தன. ஒரு நாள் என்னை அழைத்தார். ஐயா!  நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்,போதும் எனக்கு.  இனிமேல் உன் குடும்பத்தை பார்த்துக் கொள்.  அது ஒரு பாசம் கலந்த  உத்தரவு.
சில மாதங்கள் சென்ற பின்பு , கி.பி.1986 இல் ஒரு நாள்...

மனதின் ஓரத்தில் பல ஆண்டுகளாக இனிமை காத்த அந்தக்காதலை என் தந்தையிடம் கூறினேன். குடும்பம் ரணகளமானது. எனக்கு காதல், கனவு இருந்தது போல் என் தாத்தாவிற்கும் இருக்குமல்லவா? . அவரின் பேத்தியை ; அதாவது என்னுடைய தாய் மாமன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். பொருத்தமில்லாத அந்த உறவை ஏற்க என் மனம் இடம் தரவில்லை.
பரிதாபம்! இருவரின் ஆசையும் நிராசையாகிப் போய்விட்டது தான் வேதனை. உலகத்தின் உள்ள அத்தனை சோகங்களும் ,வேதனைகளும் என்னுள் வந்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்நாள் முழுவதும் யாருடைய வார்த்தைகளுக்கு மறுத்தலிக்காமல் வாழ்ந்து வந்தேனோ அவரின் வார்த்தைகளை என் காதல் மனம் ஏற்கவில்லை. அதேபோல் 26 வருடங்களாக எவனுக்கு வாழ்க்கையின் அணைத்து சூச்சுமங்களையும் கற்றுக் கொடுத்து வளர்த்தாரோ அவனின் மென்மையான காதலையும், கனவுகளையும் அவரே சிதைத்துவிட்டார். கூட்டுக்குடும்பம் சிதைந்தது.

சில வருடங்கள் கழிந்த பின்னர் என் திருமணம் சொந்த உறவுகள் இல்லாமலே நடந்தது. தாத்தா, தாய்மாமன்கள் யர்ரும் கலந்துகொள்ளவில்லை. ஏறத்தாழ ஒரு வருடம் கழிந்த பின்னர் நானும் என் மனைவியும் எனது தாத்தாவையும் பாட்டியையையும் பார்க்கச் சென்றோம். எனது பாட்டியை நான் அம்மா என்று தான் அழைப்பேன்; என்னை எட்டு மாதத்திலிருந்து தூக்கி வளர்த்தவர்கள்.  எனக்கு உண்மையான அம்மாவாக இருந்தவர்கள். எனது மனைவியுடன் என்னை பார்த்ததும் அந்த தாய்மனம் வாழ்த்ததானே  விரும்பும் . அவர்கள் கண்ணீருடன் எங்களை ஆசிர்வாதம் செய்தார்கள். அந்த ஆசிர்வாதங்களுக்கு பின்னே அவர்களுடைய ஏமாற்றம் இருந்திருக்கும் என்பது உண்மை.

கி.பி. 1993  இல் மார்ச் மாதத்தில் என் தாத்தா தனது சுவாசத்தை இழந்தார். ஆம் ! அவரது இரண்டாவது மகன் அவரை அடித்து அவமானப் படுத்திவிட்டதால் மனம் உடைந்து ஒரு வாரத்திலே இறந்து விட்டார். ஒரு நெடிய ஆலமரம் சாய்ந்தது. அந்த மரத்திலே கூடு கட்டி வாழ்ந்த பல பறவைகள் வேறு மரங்களை நாடி ஓடின. நாளடைவில் எனக்கும் ஒரு குடில் கிடைத்தது . அதன் பெயர் "வேலன்-பேச்சி இல்லம்". யார் கூறியது அவர்கள் இறந்து விட்டார்கள் என்று. அவர்கள் இன்னும் என்னுடனே வாழ்கிறார்கள்!.
 
இன்று எனக்கு புத்திசாலித்தனமான இரண்டு குழந்தைகள். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை.  வேலாண்டியின் பேரன் நன்றாகவே அவனது குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கிறான். அவரின் கனவுகளை எதையும் அவன் மறந்து விடவில்லை. அவரின் மகளுக்கு நகை செய்து கொடுத்துவிட்டான், அவரது மகளின் குடும்பத்தை இன்னும் கவனித்து வருகிறான். வருவான்......

ஆனாலும், அவனுக்குள் வருத்தமும் உள்ளது. சிலசமயம், இரவின் இருட்டில்  தன்னை தோளில் சுமந்த அந்த நெடிய உருவத்தை மானசிகமாக நினைத்து அழுது கொள்வதுண்டு. அவரின் அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கலாமோ? என்ற குற்ற மனப்பான்மை அவ்வப்போது எழும். இருந்தாலும்,  எனது மனசாட்சிக்குப் புறம்பாக இதுவரை நான் நடந்து கொள்ளவில்லை என்ற நம்பிக்கை அதற்கு மருந்தாக அமையும். ஆனாலும், வேலாண்டி என்ற அந்த மாமனிதன் இல்லை என்றால் நானும் என் தந்தை போல் ஒரு கூலி தொழிலாளியாகவே வாழ்ந்து இருப்பேன் என்பது சத்தியமான உண்மை. இப்போதும் அமெரிக்கன் கல்லூரியின் வாயிலைக் கடக்கும் போது எனது தாத்தாவையும் பெயர் மறந்து போன அந்த  வாயிற்காவலனையும் நினைக்க தவறுவதில்லை.

----- சு.கருப்பையா.

1 comment: