Wednesday 17 June 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-7

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

அதிகாரம்: புகழ் 

குறள்: 236

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

மு.வ உரை:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
கலைஞர் உரை: 


இந்திய திரைப்படத் துறையின் வரலாற்றில்  மிக உன்னதமான இடத்தை பிடித்தவர் நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிவாஜிகணேசன்  என்ற வி.சி. கணேசன் .

இவர் திரைப்படத்தில் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நிறைவான பணியை கொடுத்து, நடிப்பின் இலக்கணம் மற்றும் பல்கலைக்கழகம் என்று மதிக்கப்பட்டவர். இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்மசிறி (1966), பத்மபூஷன் (1984), தாதா சாஹிப் பால்கே விருது (1997) போன்ற விருதுகளையும்  மற்றும் பல்வேறு விருதுகளையும் , பிரான்ஸ் நாட்டின் கலை இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான செவாலியர்" என்ற பட்டத்தையும் (1995) பெற்றவர்.

1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ந் தேதி சீர்காழியில்,  சின்னையா மற்றும் ராஜாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த வி.சி.கணேசன் சிறு வயதிலே  வீட்டை விட்டு வெளியேறி கூத்து மற்றும் நாடகங்களில் நடித்து வந்தார். 1946 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் " என்ற நாடகத்தில் மாவீரன் சிவாஜியை பிரதிபலிக்கும் விதமாக சிறப்பாக நடித்ததால் தந்தை பெரியார் அவருக்கு " சிவாஜி" என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்.  1952 ஆம் ஆண்டு , சிவாஜி நடித்து வெளியான அவரின் முதல் திரைப்படமான " பராசக்தி", மாபெரும் வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் சிவாஜியின் நடிப்பும் , வசன உச்சரிப்பும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அடுத்து 1960 இல் கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்கா-ஆசிய திரைப்பட விழாவில்  அவரின் அடுத்த சிறந்த படமான "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டு அவருக்கு சிறந்த நடிகருக்கான முதல் பரிசினை பெற்று தந்தது. . அதன் மூலம் அவரின் நடிப்புத்திறன் உலக நாடுகளில் கொடிகட்டிப் பறந்தது. மொத்தத்தில் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று ஐந்து மொழிகளில் ஏறத்தாள 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன்  சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாமல்  அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்திலும்  உறுப்பினராக இருந்தார். 1961 இல் அவர் திருப்பதி கோவிலுக்குச் சென்றதை தி.மு.க கட்சி கடுமையாக விமர்சனம் செய்ததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1984 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும்   ( ராஜ்ஜிய சபை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த சிவாஜி கணேசன் , 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் " தமிழக முன்னேற்ற முன்னணி"  என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் இயங்கிய அ.தி.மு.க கட்சியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். இவரும் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை. மிகச் சிறந்த நடிகராக மக்களின் மனதை வென்ற சிவாஜியால் ஒரு அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தார்.  மனம் வெதும்பிப் போன சிவாஜிகணேசன் 1989 ஆம் ஆண்டு தமது கட்சியை ஜனதாதளத்தோடு இணைத்துவிட்டு அரசியலை விட்டு வெளியேறினார்.

பின்னாளில் , அரசியல்வாதியாக தோல்வியுற்றதைப் பற்றி கூறும் பொழுது " எனது அரசியல் சார்புள்ள நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க , அவர்கள் வாழ்விற்காக ,எனக்கு விருப்பம் இல்லாமலே அரசியல் கட்சி துவங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எப்பொழுது தவறான முடிவெடுத்து விட்டோமோ அதன் பிறகு அதனால் ஏற்படும் ஏமாற்றத்தையும்  எதிர்கொள்ளத் தானே வேண்டும்" என்று மனம் வருந்திக் கூறினார். அம்மாபெரும் கலைஞன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ந் தேதி மரணமடைந்தார்.

எனக்கு , இக்குறளை வாசிக்கும் போது  சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் வெற்றியும், தோல்வியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.



No comments:

Post a Comment