Monday 20 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-2

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

 நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.

கலைஞர் உரை:

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

மு.வ உரை: 

அதிகாரம்: உட்பகை

குறள்: 885

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட அந்த நிகழ்விற்கு இந்தக் குறள் மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆம்!. இந்துஸ்தானத்தின் (டில்லியை தலைமையிடமாகக் கொண்ட) கடைசி சக்கரவர்த்தி பிருதிவிராஜ் சௌகான் (கி.பி.1149 முதல் 1192 ஆம் ஆண்டு வரை)  வீழ்த்த வரலாறே அது. வீரம் செறிந்த அம்மன்னனின் கதை  நம் மனதில் ஆழ்ந்த வருத்தத்தையும் , வடுவையும் ஏற்படுத்துகிறது.


டெல்லி சக்கரவர்த்தி அனங்கபாலர் தோமருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது பேரனும்  ஆஜ்மீர் இளவரசனுமான பிருதிவிராஜ் சௌகானை டெல்லியின் சக்கரவர்த்தியாக நியமிக்கிறார். (கி.பி.1169). அது இன்னொரு உறவினரான கன்னோசி அரசர் ஜெயச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்களது உறவுகளுக்குள் பிணக்கும், பகையும் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஜெயச்சந்திரன் தனது மகள் சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு (கி.பி.1175) பிருதிவிக்கு அழைப்பு அனுப்பாமலும் ,அவனை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவனது உருவச்சிலையை (காவலன் வேடத்தில்) சுயம்வரம் மண்டபத்தின் வாயிலில் வைத்து விடுகிறான். ஆனால் சம்யுக்தை மணமாலையை  பிருதிவியின் சிலைக்கு அணிவித்துவிடுகிறாள் . அப்போது அங்கே மறைந்திருந்த பிருதிவி சம்யுக்தையை தூக்கிக்கொண்டு டெல்லி வந்து விடுகிறான். அதனால் பிருதிவி ,ஜெயச்சந்திரன் பகை முற்றுகிறது.     


கி.பி.1191 இல் முகம்மது கோரி (1149-1206) , இந்துஸ்தானத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து பெரும் படையுடன் டெல்லியின் மீது படையெடுக்கிறான். பிருதிவி அவனை தராயின் ( இன்றைய ஹரியானா மாநிலத்தில் ) என்ற இடத்தில் எதிர்த்து வீரத்துடன் போரிடுகிறான். பெரும் தோல்வி அடைந்த கோரி அவமானத்துடன் கஜினி திரும்பி விடுகிறான். கி.பி.1192 இல் மீண்டும் பெரும் படையுடன் டெல்லியை தாக்க வருகிறான். தகவல் அறிந்த பிருதிவி பிற இராஜபுத்திர அரசர்களை உதவிக்கு அழைக்கிறான். அனைத்து இராஜபுத்திரர்களும் பிருதிவியின் தலைமையில் அணி திரள்கிறார்கள். ஆனால் , குடும்பப் பகையினால் கோபத்தில் இருந்த ஜெயச்சந்திரன் கோரிக்கு உதவி செய்கிறான். மீண்டும் அதே இடத்தில நடந்த போரில் பிருதிவி தோல்வியுற்றதால் சிறைபிடிக்கப்பட்டு கஜினிக்குக் கொண்டு செல்லப்படுகிறான். ஜெயச்சந்திரன் அன்று செய்த தவறு தான் இந்துஸ்தான் வீழ்ச்சியடைந்து நம் நாட்டில் அந்நிய ஆட்சி ஏற்பட வழிகாட்டிவிட்டது  . ஜெயச்சந்திரனின் துரோகத்தை சரியாக தெரிந்து கொண்ட முகம்மது கோரி அவனை வளரவிட்டால் தமக்கு ஆபத்து என்று கருதி , கி.பி.1193 இல் கன்னோசியின் மேல் படையெடுத்து சென்று அவனையும் கொன்று விடுகிறான்.


சிறைபிடிக்கப்பட்ட மாவீரன் பிருதிவிராஜ் சௌகானின் கண்கள் பறிக்கப்பட்டு கஜினியில் சிறை வைக்கப்படுகிறான்.  பிருதிவியின் பால்ய நண்பனும் , புலவனுமான சந்து பார்டை எப்படியாவது பிருதிவியை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தான் சென்று கோரியின் அன்பைப் பெற்று  அங்கேயே தங்குகிறான்.  அவனது உதவியால் கி.பி. 1206 ஆம் ஆண்டில் பிருதிவி  தன் வில்வித்தை திறமையினால் முகம்மது கோரியை கொன்று விடுகிறான்.  பின்பு எதிரிகளால் கொல்லப்படுவதை தவிர்க்க இருவரும் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு இறக்கிறார்கள். இன்றும் கஜினியில் , கோரியின் கல்லறைக்கு அருகில்  பிருதிவியின் கல்லறையும்  உள்ளது .ஆனால் பிருதிவியை அவமானபடுத்தும் நோக்கத்தில் அவனது கல்லறையின் மேல் கால் வைத்து குதித்து பார்க்கும் விதமாக அமைத்துள்ளார்கள். ஜெயச்சந்திரனின் உட்பகையினால் அந்நிய மண்ணில் மறைந்துபோன அம்மாவீரனின் வரலாறு நம் அனைவரின் மனதிலும் வேதனையைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  

1 comment: