Wednesday 29 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-4

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்: 314

 

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

கலைஞர் உரை:

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
சாலமன் பாப்பையா உரை:

 

இந்திய சுதந்திரப்போரின் விடிவெள்ளி என்று அழைக்கப்படும்  மைசூர்ப்புலி மாவீரன் திப்பு சுல்தானின்  (காலம்  20-11-1750 முதல்  04-05-1799 வரை )  படைப்பிரிவில் பணிபுரிந்தவன் முகம்மதுஅலி.   உயிரை துச்சமாக மதித்து போரிடும் சிறந்தவீரன். அவன் திப்புவின் தந்தை ஹைதர் அலியின் கீழும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டவன். ஆனால் ஒரு பெண்ணிற்காக ஆங்கிலேயரின் சூழ்ச்சி வலையில் சிக்கி திப்புவுக்கு எதிராக  திரும்பி விடுகிறான். மைசூரின் இராணுவ ரகசியங்களையும் , திட்டங்களையும் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கிறான். அவனது துரோகத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்த தளபதி காஜிக்கான் , ஆதாரத்தோடு அவனைப் பிடித்து திப்புவின் முன் நிறுத்தி அவனுக்கு தண்டனை தருமாறு கேட்கிறார்.  உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று வினவுகிறார் திப்பு. தெரியும் ! எனக்கு மரண தண்டனை கொடுக்கப்போகிறீர்கள்! என்று தைரியமாகக் கூறுகிறான் முகம்மது அலி. திப்பு ஒரு நிமிடம் அவன் முகத்தைப் கூர்ந்து பார்க்கிறார்.  பிறகு , மிகவும் கம்பீரமாக இப்படி உத்தரவிடுகிறார்!. முகம்மதுஅலி! உன்னை மன்னித்து விட்டேன்  .  ஆனால் இனிமேல் என் முகத்தில் விழிக்காதே!. இந்த நாட்டைவிட்டு உடனே வெளியேறிவிடு! என்று உத்தரவிடுகிறார் திப்பு.



காஜிக்கானுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விடுகிறது . சுல்தான் !,  கடும் போராட்டத்திற்குப் பிறகே இவனை ஆதாரத்தோடு பிடிக்க முடிந்தது. ஆனால் அவனை மன்னித்துவிட்டீர்களே ! இது நியாயமா? என்று வருத்தப்படுகிறார். அதற்கு திப்பு, காஜிகான் அவர்களே! இவன் பதினாறு ஆண்டுகள் நம் நாட்டிற்காக என் தந்தையிடமும் என்னிடமும் பல போர்க்களங்களில் பணியாற்றி உள்ளான். அவனால் நமது நாட்டிற்கு நன்மை விளைந்து உள்ளது.  அவன் இப்போது செய்திருக்கும் தவறுக்காக தண்டனை அளிப்பதை விட இதற்கு முன்பாக அவன் செய்த நன்மைகளுக்குப் பிரதிபலனாக அவனை மன்னித்து  உயிரோடு விடுவது தான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்.

திருவள்ளுவர் எழுதிய இக்குறளுக்கு பொருத்தமான ஒரு மனிதனாக வாழ்ந்து வந்திருக்கிறான்  மாவீரன் திப்புசுல்தான்.  கி.பி. 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர்ப் போரில் அவன் இறந்த பின்னரே மைசூரை ஆங்கிலேயரால் பிடிக்க முடிந்தது.  இந்தியாவும் முழுமையாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது  என்கிறது இந்திய வரலாறு.


No comments:

Post a Comment