Thursday 30 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-5



ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

செங்கோன்மை

 குறள் 541:

 

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

கலைஞர் உரை:

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

மு.வ உரை:

 

மாவீரன் ஷெர்ஷா சூரி (காலம் : 1486 முதல் - 22-05-1545 வரை ).  முகலாயப்பேரரசர் ஹுமாயினைத் தோற்கடித்து கி.பி.1540 முதல் கி.பி.1545 ஆண்டுவரை ஐந்தாண்டுகள் மட்டுமே டில்லியை ஆட்சி புரிந்தவர். நீதி மற்றும் வரி வசூலில் பல சீர்திருத்தங்கள் செய்தவர். இந்தியாவில் , பஞ்சாப்-வங்காளம்; ஆக்ரா-சித்தூர்; லாகூர்-மூல்தான் போன்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் அமைத்தவரும் அவரே.  குடி மக்களிடையே எந்த பாரபட்சமும் கூடாது என்பதில் ஷெர்ஷா மிகக் கறாராக இருந்தார்.



 

அவனது நேர்மைக்கும் , நீதிவழங்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக அமைந்த ஒரு நிகழ்வை பேராசிரியர் அருணன் , தமது காலந்தோறும் பிராமணியம் பாகம் II&III இல் குறிப்பிடுகிறார். ஷெர்ஷாவின்  மூத்த மகன் அதல்கான் . இவன், ஒருநாள்  யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தான் . தெருவின் ஓரத்தில் ஒரு கடைக்காரர் வீடு வந்தது. இடிந்த வீடு; மறைப்புகள் இல்லை. அதனுள்ளே கடைக்காரர் மனைவி ஆடைகளின்றி குளித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்ட அதல்கான் அவள் அழகில் மயங்கி சிறிது  நேரம் பார்த்து விட்டு மோகத்தில் ஒரு பீடாவை அவள் மீது எரிந்து விட்டுப் போய்விடுகிறான்.   அவமானத்தில் குறுகிப் போன அப்பெண் , தனது கணவன் வந்ததும் நடந்ததைக் கூறி தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் , தான் சாகப்போவதாகவும் அழ ஆரம்பிக்கிறாள். அவன் நேரே  ஷெர்ஷாவிடம் போய் அவரது மகனை பற்றிப் புகார் செய்தான்.

 

ஷெர்ஷாஇஸ்லாமியச் சட்ட விதிகளின்படி தனது மகனுக்கு தண்டனை தர முடிவெடுத்தார். வேறென்ன !  பதிலுக்குப் பதில் தான்.  அதாவது தனது மகன் அதல்கானின் மனைவி ஆடையின்றி குளிக்க , யானை மீதிலிருந்து அவளைப் பார்த்து கடைக்காரர் பீடா வீச வேண்டும். இதுவே தீர்ப்பு! ஆடிப் போய்விட்டது அரசவை. மந்திரி பிரதானிகள் , பிரபுக்கள் ஷெர்ஷாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். அசையவில்லை ஷெர்ஷா.  அவரின் நேர்மையான தீர்ப்பினைக் கண்டு அசந்து போன கடைக்காரரே தனது புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். மாவீரனும் , சிறந்த நீதிமானுமான ஷெர்ஷாவின் 5 ஆண்டு கால  ஆட்சியில் தான் டெல்லி மக்கள் மகிழ்ச்சியாகவும் , அமைதியாகவும் வாழ்ந்தார்கள் எனவும் , இரவில் கூட பெண்கள் தனியாக நடமாடும் அளவிற்கு டெல்லி பாதுகாப்பாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

1 comment:

  1. மிகவும் வித்தியாசமான மன்னர்தான் இவர்;ஷெர்ஷாவை "ஷேர்" ஷாவாக்கி விடுகிறேன்!-------BSNL வைத்தியநாதன், மதுரை-14

    ReplyDelete